யாப்பிற்கு முரணாக பொதுச்சபைக் கூட்டத்தை நடத்தும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

by Staff Writer 11-05-2019 | 9:35 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் யாப்பிற்கு முரணாக கிரிக்கெட் நிறுவனம் நாளை (12) அவசரமாக பொதுச்சபைக் கூட்டத்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கிரிக்கெட் யாப்பின் பிரகாரம், அங்கத்துவ கழகங்களுக்கு 14 நாட்களுக்கு முன்னர் அறிவித்த பின்னரே இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பொதுச்சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும். அதேபோன்று, பொதுச்சபைக் கூட்டம் இடம்பெறும் முன்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கணக்காய்வு அறிக்கையை அந்த கழகங்களுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உள்ளதாக இலங்கை கிரிக்கெட் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த விடயங்களை மீறியே நாளை பொதுச்சபைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதுச்சபைக் கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி கோரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், விளையாட்டுத்துறை அமைச்சர் அந்தக் கடிதத்திற்கு இன்னும் பதிலளிக்கவில்லை. இவ்வாறு அவசரமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொதுச்சபைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் ஆர்வம் காட்டுவது ஏன் என்ற சந்தேகம் அதன் அங்கத்துவ கழகங்கள் மத்தியில் எழுந்துள்ளது.