பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோருக்கான அமைப்பு

பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோருக்காக புது அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ்

by Bella Dalima 11-05-2019 | 6:48 PM
பிள்ளைகளால் கைவிடப்படும் வயதான பெற்றோரைக் காக்க புது அமைப்பொன்றை தொடங்குகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். ''தாய்'' என்ற பெயரில் விழிப்புணர்வு சேவையைத் தொடங்கி, அதை தமிழகம் முழுவதும் பரப்பவும் முடிவு செய்துள்ளார். இது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கல் மனம் படைத்த சிலரால் பெற்றோர் அநாதை இல்லங்களிலும், சாலை ஓரங்களிலும், குப்பை மேடுகளிலும் குடியிருக்கும் அவலங்கள் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இவர்களைப் போன்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஈன்றெடுத்த தெய்வங்களை அவர்களின் இறுதிக்காலம் வரை கண் கலங்காமல் வைத்து காப்பாற்றிட வேண்டும் என்ற நோக்கத்தோடு தாய் எனும் விழிப்புணர்வு சேவையைத் தொடங்கி, தமிழகம் முழுவதும் அதை பரப்பவும் முடிவு செய்திருக்கிறேன். பெற்றோர்களை அநாதை இல்லங்களில் விட்டுச்சென்ற பிள்ளைகள் அவர்களைப் பார்ப்பதற்கு கூட வருவதில்லை. அதன் விளைவாக யாரைப் பார்த்தாலும் தங்கள் மகன் வந்துவிட்டான் என்று கட்டிப்பிடித்து தற்காலிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள். இப்படி எனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தின் பாதிப்புதான் இந்த அமைப்பு உருவாகிடக் காரணமாக இருந்தது. இனி எந்த ஒரு தாய், தந்தையும் முதியோர் இல்லத்திற்குச் சென்றுவிடக்கூடாது. ஏற்கனவே விடப்பட்டிருந்தால், திரும்ப வரவழைத்து கோவில் தெய்வம் போல வணங்குவோம்,
என்று தெரிவித்துள்ளார் லாரன்ஸ். இதற்கான முன்னோட்டமாக ஒரு விழிப்புணர்வு பாடலை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இன்னும் சில நாட்களில் அப்பாடலுக்கு அவரே நடனம் அமைத்து, வீடியோவாக வெளியிடவுள்ளார். இப்பாடல் அன்னையர் தினத்தன்று வெளியாகவுள்ளது.