கே. ஶ்ரீபவனிடம் வாக்குமூலம் பதிவு செய்ய தீர்மானம்

மஹபொல நிதியத்தில் மோசடி: முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஶ்ரீபவனிடம் வாக்குமூலம் பதிவு செய்ய தீர்மானம்

by Staff Writer 10-05-2019 | 4:00 PM
Colombo (News 1st) மஹபொல நிதியத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஶ்ரீபவனிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் புதன்கிழமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று முன்னாள் பிரதம நீதியரசரின் இல்லத்திற்கு செல்லவுள்ளதாக, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார். பிரதம நீதியரசர் இந்த நிதியத்தின் நம்பிக்கை பொறுப்பு சபையின் பொறுப்பாளராக இருப்பதுடன், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதன் தலைவராகவும் செயற்படுவார். 2015 ஆம் ஆண்டு மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் காலப்பகுதியில் முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஶ்ரீபவன், நிதியத்தின் தலைவராக பதவி வகித்ததாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.