Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், நாட்டை வழமைக்கு கொண்டு வருவதற்காகவும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் பாதுகாப்பு பிரிவினர் இரவு பகலாக அர்ப்பணிப்பு செய்து வருகின்றனர்.
எனினும், அவர்களின் அர்ப்பணிப்பின் ஊடாக கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் அரசியல் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்படுவது தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்படுகின்றது.
இது தொடர்பில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
பயங்கரவாதத்திற்கு எதிராக பொலிஸார் மற்றும் முப்படையினர் முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கை தொடர்பில், மக்களுக்குள் சந்தேகம் ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். கைது செய்யப்படுபவர்களை அமைச்சர்கள் காப்பாற்றுவதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவர்களுக்காக பேசுகின்றனர். அதனால் இந்த விடயங்கள் தொடர்பில் உணர்வுப்பூர்வமாக பாருங்கள். எவரேனும் ஒருவருடைய அழுத்தத்திற்காக விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என நாம் அரசாங்கத்திடம் கூறுகின்றோம். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை விடுவிக்குமாறு அரசியல்வாதி ஒருவர் அழுத்தம் விடுத்ததாக இராணுவத் தளபதி பத்திரிகையொன்றுக்கு கூறியுள்ளார். இது தற்போது பாரிய அபாய நிலையாகும்.