தாக்குதல் நடத்திய பயங்கரவாதக் குழுவிடம் 7 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள்

by Staff Writer 09-05-2019 | 6:48 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதக் குழுவிடம் 140 மில்லியன் ரூபா பணமும் 7 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும் காணப்படுவதாக பாதுகாப்பு தரப்பினர் கண்டறிந்துள்ளனர். இவ்வளவு பாரிய சொத்துக்களும் செலாவணியும் நாட்டிற்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆகவே, இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நாட்டின் அந்நிய செலாவணி சட்டத்தை பலப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்று சபையில் வலியுறுத்தினார். இந்த அபாய எச்சரிக்கையை நியூஸ்ஃபெஸ்ட் நீண்ட நாட்களுக்கு முன்னரே வௌிப்படுத்தியிருந்தது. நாட்டில் இருந்த அந்நிய செலாவணி சட்டத்தை இரத்து செய்து, புதிய அந்நிய செலாவணி சட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொண்டு வந்தார். 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி பரிமாற்ற சட்டமூலத்தை 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரதமர், ஜூலை 25 ஆம் திகதி அதனை நிறைவேற்றிக்கொண்டார். பொருளாதார நிபுணர்கள் விடுத்த அபாய எச்சரிக்கைகளை கருத்திற்கொள்ளாமல் இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டார். இந்த சட்டமூலத்தின் பாதிப்புகள் தொடர்பில் இலங்கை வணிக சபையின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன அவ்வேளையில் சுட்டிக்காட்டியிருந்தார்.