சதொச புதைகுழி தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிப்பு

மன்னார் சதொச புதைகுழி தொடர்பிலான அறிக்கை மன்றில் சமர்ப்பிப்பு

by Staff Writer 08-05-2019 | 9:22 AM
Colombo (News 1st) மன்னார் மனித புதைகுழி தொடர்பில் நீதிமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை அடுத்த மாதம் 31 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, அகழ்வுப்பணிகள் தொடர்பில் ஆலோசனை வழங்கும் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார். அது தொடர்பிலான அனைத்து சோதனைகளும் நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அகழ்வின்போது மீட்கப்பட்ட மனித எலும்புகள் தவிரந்த ஏனைய பொருட்கள் நீதிமன்ற அனுமதியின் பேரில் மீண்டும் ​சோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார். அறிக்கையை வழங்கியதன் பின்னர் அகழ்வுப்பணிகளை தொடர்வதா இல்லையா என்பது தொடர்பில் நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் என ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார். மீட்கப்பட்டுள்ள மனித எலும்புகள் 350 முதல் 600 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்துக்குரியவை என அமெரிக்காவின் பீட்டா அனலைசிஸ் நிறுவனத்தினால் கால எல்லை நிர்ணயிக்கப்பட்டது. கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மன்னார் சதொச கட்டட நிர்மாண நடவடிக்கைகளுக்காக நிலத்தைத் தோண்டிய சந்தர்ப்பத்தில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.