பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயன்றவர் கைது

by Staff Writer 08-05-2019 | 9:09 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என கோரி, ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 இலட்சம் ரூபாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்து, இரண்டரை இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். ஹொரவப்பொத்தானை - முக்கருவெவ பகுதியைச் சேர்ந்த 26 வயதான மொஹமட் சிஃபான் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் ஹொரவப்பொத்தானையில் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாட்டாளர் என கூறப்படும் அப்துல் மஜிட் மொஹமட் நியாஸ் என்ற நபரின் நெருங்கிய உறவினராவார். அனுராதபுரம் பிரதம நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.