by Staff Writer 07-05-2019 | 12:57 PM
Colombo (News 1st) தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ) அமைப்பின் கொழும்பு மாவட்ட ஏற்பாட்டாளர் என கூறப்படும் மொஹமட் பாரூக் மொஹமட் பவாஸ், எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சிறைச்சாலைகள் அதிகாரிகளால் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட ஏற்பாட்டாளராக சந்தேகநபர் செயற்பட்டு வந்துள்ளமை விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இதன்போதுமன்றுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் ஆவணங்கள், காணொளிகள் என்பன சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில், சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு அவர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகநபர் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமையால் அவருக்கு பிணை வழங்குவதற்கான அதிகாரம் தமக்கு இல்லை என, பிரதம நீதவான் இதன்போது தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.