வவுனியாவில் சோதனை: ஹெலிகொப்டர்களைத் தகர்க்கக்கூடிய 85 குண்டுகள் மீட்பு

by Staff Writer 07-05-2019 | 8:08 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் முப்படையினர் இன்றும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். வவுனியா - அலகல்ல, அளுத்கம பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஹெலிகொப்டர்களைத் தகர்க்கக்கூடிய 85 குண்டுகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பொலிஸார் சம்பம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கிளிநொச்சி - பூநகரி, முக்கொம்பன் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையொன்றை இன்று முன்னெடுத்தனர். இதன்போது, 9 உள்ளூர் துப்பாக்கிகளும் 2 வாள்களும் தோட்டாக்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை - கந்தேநுவர பிரதான வீதியின் பண்டாரபொல பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து T56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. மாத்தளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவே இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்