வெசாக் பூரணை தின விழாக்களை தவிர்க்குமாறு வேண்டுகோள்

by Staff Writer 06-05-2019 | 9:17 PM
Colombo (News 1st) இந்தத் தடவை வெசாக் பூரணை தினத்தில் மக்களை ஒன்றுதிரட்டி விழாக்கள் நடாத்துவதைத் தவிர்க்குமாறு மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் இன்று (6ஆம் திகதி) வேண்டுகோள் விடுத்துள்ளனர். வெசாக் பூரணை தினத்தில் மத அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு பொதுமக்களிடம் மகாநாயக்கத் தேரர்கள் கோரியுள்ளனர். நாட்டில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களினால் அச்சமடைந்துள்ள அனைத்து இலங்கையரும் மன உறுதியைப் பெற வழிவகை செய்வது அனைவரினதும் பொறுப்பு எனவும் மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்களும் தெரிவித்துள்ளனர். இதனால் மத அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு மகாநாயக்கத் தேரர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெசாக் பூரணை தினத்தில் புண்ணிய கருமங்கள் உள்ளிட்ட விடயங்களை ஏற்பாடு செய்யும்பொழுது பாதுகாப்பு பிரிவினரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு செயற்படுமாறும் மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். பதற்றமான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்காக அனைத்து அரசியல் தலைவர்களையும் இன, மத வேறுபாடின்றி ஒன்றிணைந்து செயற்படுமாறும் பயங்கரவாதத்தை ஒழிக்க அனைவரையும் ஒரே கொள்கையின் கீழ் திடசங்கற்பம் பூணுமாறும் மகாநாயக்க தேரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.