பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள்

by Staff Writer 04-05-2019 | 8:31 PM
Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமை (06) முதல் 6 ஆம் தரத்திற்கு மேற்பட்டோருக்கான பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. கல்வி அமைச்சு மற்றும் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய, பாடசாலைகளில் விசேட சோதனையை முன்னெடுக்கும் நடவடிக்கை நேற்று (03) ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய, பல பாடசாலைகளில் இன்றும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. நாளை மறுதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர பின்வருமாறு தெரிவித்தார், கத்தோலிக்க தனியார் பாடசாலைகள் 6 ஆம் திகதி திறக்கப்பட மாட்டாது. ரமழான் காலம் வரவுள்ளதால், 6 ஆம் திகதி முதல் முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும். அரசாங்க பாடசாலைகள் மாத்திரமே திறக்கப்படவுள்ளன. பாதுகாப்புக்குழு ஸ்தாபிக்கப்பட்டிருந்தால், பொலிஸாருடன் கலந்துரையாடி முடிந்தால் பாடசாலையைத் திறக்குமாறு, கல்வியமைச்சர் அதிபர்களுக்கு அறிவித்துள்ளார். பாடசாலை நடவடிக்கையை ஆரம்பிப்பது தொடர்பில் அதிபர்கள் நினைத்தவாறு தீர்மானிக்க முடியுமான நிலைமை தோன்றியுள்ளது. எனினும், பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டுமென்பது தனித்து எடுத்த தீர்மானமல்ல எனவும் அரசாங்கம், பாதுகாப்புத் தரப்பு வழங்கிய ஆலோசனைக்கமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.