முடி சூடி அரியணை ஏறினார் மகா வஜிராலங்கோன்

தாய்லாந்தில் முடி சூடி அரியணை ஏறினார் மகா வஜிராலங்கோன்

by Bella Dalima 04-05-2019 | 5:10 PM
தாய்லாந்து மன்னர் மகா வஜிராலங்கோன் தனது பாதுகாப்புப்படை துணை தலைவரான சுதிடா டித்ஜாய் என்பவரை திருமணம் முடித்தார். இதையடுத்து, இன்று அவர் முடி சூடி அரியணை ஏறினார். தாய்லாந்து நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜ் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார். அன்று முதல் அரசியலமைப்பு மன்னராக மகா வஜிராலங்கோன் (66) பொறுப்பேற்றார். இவரை 'ரமா எக்ஸ்' என்றே அழைக்கின்றனர். இவர் திருமணம் முடித்து 4 நாட்கள் கடந்துள்ள நிலையில், இன்று காலை அதிகாரப்பூர்வமாக முடி சூடி அரியணை ஏறினார். தாய்லாந்து அரசு முன்னதாக அறிவித்திருந்தபடி புத்தம் , பிராமண முறைப்படி விழா நடத்தப்பட்டு, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, தாய்லாந்தின் முக்கிய நகரங்களில் இரவு நேரங்களில் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், மன்னரைக் காண மக்கள் அனைவரும் ஆர்வத்துடனும், அதிக எதிர்பார்ப்புடனும் கூடியுள்ளனர்.