பாலத்தை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டம்?

கொழும்பினுள் பிரவேசிப்பதற்கான பாலத்தை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டம்: பொலிஸ் அத்தியட்சகர் விளக்கம்

by Bella Dalima 04-05-2019 | 7:22 PM
Colombo (News 1st) கொழும்பு நகருக்குள் பிரவேசிப்பதற்கான முக்கிய பாலத்தை வெடிக்கச்செய்து தகர்ப்பதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெளிவுபடுத்தினார். பாதுகாப்பு நிலை தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைப்பதாகவும் அவ்வாறான தகவல் கிடைத்ததும், அது குறித்து சில அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் எனவும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். புலனாய்வுப் பிரிவினர் அந்தத் தகவலை உறுதிப்படுத்தினால், பகுப்பாய்வு செய்ததன் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவ்வாறான மேலதிக நடவடிக்கைகளின்போது தேவைக்கேற்ப சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் எனவும் அவர் விளக்கமளித்தார். மேலும், கிடைக்கும் தகவலை பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைக்காக வேறு பிரிவுகளுக்கு அறிவித்தவுடன் அது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பகிரங்கப்படுத்தப்படுகின்றது என்பதை கடந்த காலங்களில் தாம் அவதானித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால் மக்கள் குழப்பமடைவதாகக் குறிப்பிட்ட பொலிஸ் அத்தியட்சகர், தேசிய ஊடக மத்திய நிலையமும் அரசாங்க தகவல் திணைக்களமும் பொலிஸ் மற்றும் முப்படைகளின் ஊடகப்பேச்சாளர்களும் எடுக்கும் முயற்சிகள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ''மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய விடயங்கள் காணப்பட்டால் உடனடியாக மக்களுக்கு அறிவிப்போம். உடனடியாக அறிவிக்க வேண்டிய விடயம் காணப்பட்டால், மிக விரைவாக ஊடகங்களூடாக அறிவிப்போம்,'' என பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்