யாழ். பல்கலைக்கழகத்தில் சோதனை: மாவீரர் தின போஸ்டர்களால் மாணவர் ஒன்றியத் தலைவரும் செயலாளரும் கைது

by Staff Writer 03-05-2019 | 4:57 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழகம் மற்றும் வவுனியா வளாகம் இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டன. யாழ். பல்கலைக்கழக வளாகத்தின் நிர்வாக கட்டடம், மருத்துவப்பீடம், கலைப்பீடம் ஆகியன இராணுவத்தினரால் இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டன. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அலுவலகத்தில் மாவீரர் தின போஸ்டர்கள் காணப்பட்டமையால் மாணவர் ஒன்றியத் தலைவரும், செயலாளரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மருத்துவப் பீட உள்ளக பயிற்சி இறுதி ஆண்டு மாணவர்களின் விடுதி இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது. வவுனியா - பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் மற்றும் மாணவர் விடுதி உட்பட கற்கை நிலையங்கள் இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டன.