பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

by Staff Writer 03-05-2019 | 8:20 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் சில இன்று இடம்பெற்றன. அம்பாறை - ஒலுவில் ஜூம்மா பள்ளிவாசலுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. ஜூம்மா தொழுகையின் பின்னர் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். ஒலுவில் ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் ஒலுவில் உலமா சபை ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டிப்பதாகவும் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தும் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, நாவலப்பிட்டி ஜூம்மா மஸ்ஜித் பள்ளிவாசலில் தொழுகை நிறைவுற்றதன் பின்னர் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தொழுகையில் பங்கேற்ற ஒரு சாரார் மாத்திரமே கவனயீர்ப்பில் கலந்துகொணடிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.