வதந்தி பரப்பியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

குடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக வதந்தி பரப்பியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 03-05-2019 | 4:19 PM
Colombo (News 1st) கடந்த 21 ஆம் திகதி கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து குடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக ஒலிபெருக்கு ஊடாக உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்கள் பொய் பிரசாரம் செய்தமையினூடாக இனங்களிடையே முறுகலைத் தடுப்பதற்கான சர்வதேச பிரகடனத்தை மீறி செயற்பட்டுள்ளதாக அறிவித்த நீதவான், இந்த விடயம் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்று மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு முகத்துவாரம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.