கடிதங்கள் மூலம் வதந்திகளைப் பரப்ப முயன்ற மூவர் குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

by Staff Writer 03-05-2019 | 3:51 PM
Colombo (News 1st) அரச விரோத கருத்துக்களுடன் கூடிய 600 கடிதங்களுடன் மத்திய தபால் பரிமாற்றகத்தில் கைது செய்யப்பட்ட மூவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். போலி தகவல்கள் அடங்கிய கையேடுகளை நாடளாவிய ரீதியில் உள்ள விகாரைகளுக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க முயற்சித்த குறித்த மூவரும் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் வைத்து நேற்று (02) பிற்பகல் கைது செய்யப்பட்டனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான பிழையான தகவல்கள் மற்றும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பான வதந்திகளைப் பரப்புவதற்கு இவர்கள் முயற்சித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கையேடுகளில் ஜனாதிபதியின் பெயரும் அரச விரோத சொற்கள் மற்றும் இனங்களுக்கிடையே முரண்பாடு ஏற்படக்கூடிய சொற்பதங்கள் அடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துளார். சந்தேகநபர்கள் அரச தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்புடையவர்கள் எனவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.