பாதுகாப்புக் கருதி கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்

by Staff Writer 02-05-2019 | 9:53 AM
Colombo (News 1st) நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 128 முஸ்லிம் கைதிகள் வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகளுக்குள் ஏற்படும் மோதல்களைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் D.M.J.W. தென்னகோன் தெரிவித்துள்ளார். இவர்களில் 75 பேர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கும் ஏனைய கைதிகள் வாரியபொல மற்றும் மஹர சிறைச்சாலைகளுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதனைத்தவிர, மாவனெல்ல சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 11 பேர் தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அண்மையில் மாவனெல்ல பகுதியில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களே தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேவேளை வெலிக்கடை, மெகசின், நீர்கொழும்பு, காலி, களுத்துறை உள்ளிட்ட 11 சிறைச்சாலைகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் D.M.J.W. தென்னகோன் தெரிவித்துள்ளார்.