கல்முனையில் இரத்தக்கறை படிந்த கார் ஒன்றுடன் ஒருவர் கைது

by Staff Writer 02-05-2019 | 1:21 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் இன்றும் (2ஆம் திகதி) சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து இந்தத் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், கல்முனை பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேநபரிடமிருந்து இரத்தக்கறை படிந்த கார் மற்றும் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய நிழற்படங்களைக் கொண்ட கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் விசேட அதிரடிப்பயைினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கல்முனை பகுதியை சேர்ந்த பொறியிலாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இதேநேரம், கலஹா மற்றும் மாத்தறை - மாலிம்பட பகுதிகளில் வாள் மற்றும் கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. அத்தோடு, பண்டாரகம அலுத்கம பகுதியில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தவிர, கல்கிஸ்ஸ விஹார மாவத்தையில் தாக்குதல்களுடன் தொடர்புடைய காணொளிகள், நிழற்படங்கள் மற்றும் குரல் பதிவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், தர்கா நகர் நகரில் வெலிபிட்டிய பகுதியை அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.