by Bella Dalima 02-05-2019 | 4:42 PM
Colombo (News 1st) இலங்கையை போன்று இந்தியாவிலும் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சிவசேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இலங்கையை போல் இந்தியாவிலும் புர்கா அணிவதை தடை செய்யுமாறு சிவசேனா அமைப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக சிவசேனா அமைப்பின் உத்தியோகப்பூர்வ நாளிதழான சாம்னாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நாளிதழில் இலங்கையின் முடிவு துணிகரமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இலங்கையை பின்பற்றி இந்தியாவும் இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என சிவசேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.