அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தேடுதல் நடவடிக்கைகள்

பாதுகாப்புக் கருதி பல்கலைக்கழகங்களில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

by Staff Writer 01-05-2019 | 11:46 AM
Colombo (News 1st) அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்பு நடைமுறையைக் கருத்தில்கொண்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முப்படையினர் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து இந்தத் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக, ஆணைக்குழு மேலும் குறிப்பிடுகின்றது. பல்கலைக்கழகங்களின் ஆய்வுகூடங்கள், கேட்போர் கூடம், நூலகம், தங்குமிடம் உட்பட ஏனைய இடங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்புத் தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள திகதிக்கு அமைய மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களை மீளத்திறப்பதற்கான திகதி அறிவிக்கப்படும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களை ஆரம்பித்ததன் பின்னரான மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தமது ஆள் அடையாள அட்டைகளை எப்போதும் காட்சிப்படுத்துமாறும் பல்கலைக்கழகத்திற்குள் பிரசேிப்பதற்கு முன்னர் தமது பைகள் பொதிகளை பரிசோதிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, முகத்தை மறைப்பதற்கான ஆடைகள் தடை செய்யப்பட்டுள்ளதுடன் வௌிநபர்கள் பல்கலைக்கழகங்களினுள் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.