சில பகுதிகளில் மே தினக் கூட்டங்கள் இடம்பெற்றன

நாட்டின் சில பகுதிகளில் மே தினக் கூட்டங்கள் இடம்பெற்றன

by Staff Writer 01-05-2019 | 10:40 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் இன்று மே தினக் கூட்டங்கள் இடம்பெற்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் பச்சிளைப்பள்ளி நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதேவேளை, சமூக விழிப்புணர்விற்கான மக்கள் அமைப்பு இன்று வவுனியாவில் மே தினக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள சமூக விழிப்புணர்விற்கான மக்கள் அமைப்பின் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை, யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்க ஏற்பாட்டில் மே தின ஒன்றுகூடல் இன்று பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்க பொதுமண்டபத்தில் இடம்பெற்றது. இந்த மே தின ஒன்று கூடலில் இலங்கை ஆசிரியர் சங்கம், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம், புதிய அதிபர்கள் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம் உள்ளிட்டவையும் கலந்துகொண்டிருந்தன. மன்னார் மாவட்ட மீனவர்கள் மே தினத்தை முன்னிட்டு கடற்றொழில் உபகரணங்களுக்கு கடல் அன்னையிடம் ஆசிர்வாதம் பெறும் சமய சடங்கு இன்று காலை இடம்பெற்றது. பேசாலை புனித சூசையப்பர் தேவாலயத்திலிருந்து மீனவர்கள் ஊர்வலமாக சென்று கடல் நீரில் உபகரணங்களை நனைத்து கடல் அன்னையிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர். புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் மேதினக் கூட்டம் யாழ். புத்தூரில் நடைபெற்றது.