பெலும்மஹர துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

by Staff Writer 30-04-2019 | 10:00 AM
Colombo (News 1st) கம்பஹா - பெலும்மஹர பகுதியில் இன்று (30ஆம் திகதி) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று அதிகாலை 3.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. சந்தேகத்திடமான பார்சல் ஒன்றை கொண்டுசென்ற நபரை பொலிஸார் நிற்குமாறு கூறியும் அவர் பொலிஸ் ஆணையை கண்டுகொள்ளாமல் சென்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்பின்னர் பொலிஸ் அதிகாரி வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதன்போது துப்பாக்கியின் ரவை அருகிலிருந்த மின்கம்பத்தில் பட்டு பஸ் தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் மீது பட்டதில் குறித்த நபருக்குக் காயமேற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 43 வயதான நபர், சிகிச்சைக்காக கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவரது நிலைமை கவலைக்கிடமானதாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், சந்தேகத்திடமான பார்சலுடன் வந்த நபர் பார்சலைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் குறித்த பார்சலை சோதனைக்கு உட்படுத்திபோது அதில் 2 தாராக்களும் ஒரு கோழியும் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.   இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பெலும்மஹர பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.