கனகராயன்குளத்தில் யுத்த உபகரணங்கள் மீட்பு

கனகராயன்குளத்தில் யுத்த உபகரணங்களும் வெடிபொருட்களும் மீட்பு

by Staff Writer 30-04-2019 | 1:54 PM
Colombo (News 1st) வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது புதைக்கப்பட்டிருந்த யுத்த உபகரணங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. கனகராயன்குளம் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றின் வளாகத்தில் மலசலகூடத்திற்கு அருகில் புதைக்கப்பட்ட நிலையில் இவை மீட்கப்பட்டதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. ஈயக்கடதாசி மற்றும் கடதாசிகளில் சுற்றி குறித்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது கைக்குண்டு ஒன்றும் கன்னி வெடிகள் மூன்றும் ஆர்.பி.ஜி. ரவையும் 15 கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. குறித்த உணவகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, யாழ். குருநகர் பகுதியில் இன்று காலை முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.