புதிய பாதுகாப்புச் செயலாளர் நியமனம்

by Staff Writer 29-04-2019 | 3:11 PM
Colombo(News 1st) புதிய பாதுகாப்புச் செயலாளராக ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத்தளபதி, ஜெனரல் எஸ்.எச். ஷாந்த கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (29ஆம் திகதி) பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து அவர் நியமனக் கடிதத்தைப் பெற்றுள்ளார். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 1970 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்துகொண்ட ஷாந்த கோட்டேகொட, 2004 முதல் 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத் தளபதியாக சேவையாற்றியுள்ளார். அதேநேரம், தாய்லாந்து, பிரேஸில் உள்ளிட்ட நாடுகளுக்கான உயர்ஸ்தானிகராகவும் கடமையாற்றியுள்ளார். இதனிடையே, புதிய பிரதம நீதியரசர், பதில் சட்டமா அதிபர், புதிய கணக்காய்வாளர் நாயகம் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோரையும் ஜனாதிபதி நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.