அதிகரித்த தேர்தல் பணி காரணமாக 270 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் அதிகரித்த தேர்தல் பணி காரணமாக 270 பேர் உயிரிழப்பு

by Staff Writer 28-04-2019 | 1:20 PM
Colombo (News 1st) இந்தோனேஷியாவில் அதிகரித்த தேர்தல் பணிகள் காரணமாக 270க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகில் ஒரேநாளில் நடாத்தப்படும் மிகப்பெரிய தேர்தலை இந்தோனேஷியா சந்தித்த 10 நாட்களின் பின்னர், தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த 270 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நீண்டநேரமாக மில்லியன் கணக்கான வாக்குகளை எண்ணியமையால் ஏற்பட்ட சோர்வு தொடர்பான நோய்கள் காரணமாக இவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்தோனேஷிய வரலாற்றில் முதல்தடவையாக செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுடன் தேசிய மற்றும் பிராந்திய பாராளுமன்றங்களுக்கான தேர்தல் நடாத்தப்பட்டிருந்தது. இந்தோனேஷியாவின் 260 மில்லியன் வாக்காளர்களில் 193 மில்லியன் வாக்காளர்கள் குறித்த தேர்தலில் வாக்களித்திருந்தனர். இதற்காக அமைக்கப்பட்டிருந்த 8 இலட்சம் வாக்களிப்பு நிலையங்களில் ஒவ்வொரு வாக்காளரும் 5 வாக்குகளைச் செலுத்தியிருந்தனர். இந்த வாக்குகளைத் தொடர்ச்சியாக எண்ணிய சோர்வினாலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நோய்த் தாக்கத்தினாலும் நேற்று (27ஆம் திகதி) இரவு வரை 272 பேர் உயிரிழந்துள்ளதாக, இந்தோனேஷிய தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் கூறியுள்ளார்.