நிந்தவூரில் சோதனை நடவடிக்கை: சந்தேகத்திற்குரிய பொருட்கள் கைப்பற்றபட்டன

by Staff Writer 27-04-2019 | 7:54 PM
Colombo (News 1st) அம்பாறை - நிந்தவூர் பகுதியில் இன்று மற்றுமொரு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நிந்தவூரில் தற்கொலைக் குண்டுதாரிகள் குழுவினர் உள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து வீடொன்றை சோதனைக்குட்படுத்தினர். தற்கொலை அங்கிக்குப் பயன்படுத்தப்படும் சிறியரக இரும்பு உருண்டைகளைப் பொருத்தும் தகடு, அதற்காகப் பயன்படுத்தப்படும் சுவிட்ச், பதிவு செய்யப்படாத வாகனம், கூரிய கத்தி உள்ளிட்ட பொருட்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, அம்பாறை சம்மாந்துறை - செந்நெல் கிராமத்தில் நேற்று (26) சோதனைக்குட்படுத்தப்பட்ட வீட்டிலிருந்து வெடிபொருட்களுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ட்ரோன் கெமரா, ஐ.எஸ் அமைப்பினுடையது என சந்தேகிக்கப்படும் கொடி, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்தாரிகள் தொடர்பில் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட காணொளியில் காணப்படுவதைப் போன்ற உடை, 150-க்கும் அதிகமான ஜெலட்னைட் குச்சிகள், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறிய ரக இரும்பு உருண்டைகள் உள்ளிட்டவை இதன்போது கைப்பற்றப்பட்டன.