IMF இல் நிதியுதவி கோரும் பாகிஸ்தானிய பிரதமர்

சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி கோரும் பாகிஸ்தானிய பிரதமர்

by Staff Writer 27-04-2019 | 10:13 AM
Colombo (News 1st) பாகிஸ்தானை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்திடம் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் நிதியுதவி கோரியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் நோக்கிலும் அதனால் ஏற்பட்டுள்ள அச்சங்களை தவிர்த்துக்கொள்ளும் நோக்கிலும் 8 பில்லியன் டொலர் நிதியுதவி கோரியுள்ளதாக இம்ரான் கான் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் சர்வதேச நாயண நிதியம் மற்றும் உலக வங்கியின் தலைவர்களை சந்தித்து அவர் கலந்துரையாடியுள்ளார். இந்தக் கலந்துரையாடல் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் தலைமையில் அந்நாட்டு தலைநகர் பெய்ஜிங்கில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பாகிஸ்தானை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழச் செய்வதற்கான ஒத்துழைப்பினை வழங்க தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் முகாமைத்துவப் பணிப்பாளர் லகார்ட் கூறியுள்ளார். தமது டுவிட்டர் தளத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று கடந்த மாதம் அந்நாட்டு தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.