IPL Match: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

by Staff Writer 27-04-2019 | 7:51 AM
Colombo (News 1st) இந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் ரோஹித் சர்மா 67 ஓட்டங்களையும் குவின்டன் டி கொக் 15 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். லுவிஸ் 32 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் மிச்செல் சென்டர் 2 விக்கெட்களை வீழ்த்தியதுடன், தீபக் ச்சஹர் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். 156 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 17ஆவது ஓவரின் நான்காவது பந்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. மிச்செல் சென்டர் 22 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் லசித் மாலிங்க 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன், குருணல் பாண்டியா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.