தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

by Staff Writer 24-04-2019 | 5:53 PM
Colombo (News 1st) இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடல் மார்க்கமாக பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்று இந்திய உள்துறை அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் தமிழக பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், ரோந்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். மர்மமான படகுகள் மற்றும் மர்மப் பொருட்கள் தொடர்பிலும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தொடர்பிலும் இந்திய கடலோர காவல்படையினர் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர். 24 மணித்தியாலங்களும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, சென்னையில் அமைந்துள்ள இலங்கை தூதரகம், இலங்கையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மதஸ்தலங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.