குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக ஆத்மசாந்தி பிரார்த்தனைகள் முன்னெடுப்பு

by Staff Writer 24-04-2019 | 8:04 PM
Colombo (News 1st) கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி நாட்டின் பல பகுதிகளிலும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன. எட்டியந்தோட்டை பஸ் நிலையத்தில் சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றன. மெழுகுவர்த்தி ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வழிபாடு ஒன்றை நுவரெலியா மாவட்ட சர்வமத ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. ஹட்டன் குடாகம சர்வோதய கேட்போர் கூடத்தில் பிரார்த்தனை இடம்பெற்றதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில், மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையால் ஆத்ம சாந்தி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. கிளிநொச்சி பரந்தன் வர்த்தகர்களால் பரந்தன் பேருந்து நிலையத்தில் இன்று அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேவேளை, தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில், நாட்டின் பல இடங்களிலும் கடைகள் மூடப்பட்டு வௌ்ளை மற்றும் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.