நாளைய தினம் தேசிய துக்கதினமாகப் பிரகடனம்

பயங்கரவாத ஒழிப்பிற்கான சரத்தை வர்த்தமானியில் அறிவிக்க தீர்மானம்

by Staff Writer 22-04-2019 | 2:40 PM
Colombo (News 1st) நாளைய தினத்தை தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பாதுகாப்புச் சபை இன்று முற்பகல் கூடியபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அவசரகால சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பிற்கான சரத்தை மாத்திரம் இன்று நள்ளிரவு 12 மணி முதல் வர்த்தமானியில் அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு அதிகாரத்தை வழங்க இதனூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய அமைப்பு அதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்தல், இதற்கு உதவிபுரிந்த ஏனைய சக்திகளை இல்லாதொழிப்பதற்கு தேவையான ஆலோசனைகளை பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு ஜனாதிபதி வழங்கியுள்ளார். இலங்கையிலுள்ள அனைத்து தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை அழைத்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தௌிவுப்படுத்தி சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் பின்புலத்தில் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கள் உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளமையினால் அவர்களை ஒடுக்குவதற்கு சர்வதேசத்தின் உதவியை எதிர்ப்பார்த்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஏனைய வழிபாட்டுத் தலங்களுக்குத் தேவையான பாதுகாப்பினை வழங்குமாறு பாதுகாப்பு பிரிவினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கைகளை உடனடியாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.