by Staff Writer 22-04-2019 | 2:57 PM
Colombo (News 1st) ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய இரண்டாவது போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஓர் ஓட்டத்தால் தோல்வியடைந்துள்ளது.
பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் இரவு ஆட்டமாக இந்தப்போட்டி நடைபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்களை பெற்றது.
பார்திப் பட்டேல் அதிகபட்சமாக 57 ஓட்டங்களை பெற்றார்.
வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 83 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்களையும் இழந்து தடுமாற்றமடைந்தது.
அபாரமாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி 7 சிக்சர்கள் 5 பவுன்டரிகளுடன் 48 பந்துகளில் 84 ஓட்டங்களை விளாசினார்.
கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 26 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் மஹேந்திரசிங் தோனி 4 சிக்சர்களை விளாசி வெற்றியீட்டும் நம்பிக்கையை உருவாக்கினார்.
கடைசி பந்தில் சென்னை அணியின் வெற்றிக்கு 02 ஓட்டங்கள் தேவைப்பட, ஷர்துல் தாகூர் ரன் அவுட் ஆனார்.
போட்டியில் ஓர் ஓட்டத்தால் பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் அணி த்ரில் வெற்றியீட்டியது.