மேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருகிறது

by Staff Writer 20-04-2019 | 8:09 PM
Colombo (News 1st) மேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் நாளை (21) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. மேல் மாகாண சபையினுடைய ஆட்சிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் ஆளுநரின் கீழ் கொண்டுவரப்படும். அவ்வாறு ஆளுநர்களின் அதிகாரத்திற்குள் கொண்டுவரப்படும் 8 ஆவது மாகாண சபை இதுவாகும். கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் 2017 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. வடமேல், மத்திய மற்றும் வட மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் 2018 ஆம் ஆண்டுடன் நிறைவுக்கு வந்தது. தென் மாகாண சபையின் ஆட்சிக்காலம் கடந்த 10 ஆம் திகதியுடன் நிறைவுற்றது. 9 மாகாணங்களில் மீதமாகவுள்ள ஊவா மாகாணத்தின்ஆட்சிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நிறைவுக்கு வரவுள்ளது. தொடர்ச்சியாகக் காலம் தாழ்த்தப்பட்டு வருகின்ற மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான வாய்புள்ளதா? மாகாண சபைத் தேர்தலை தாம் கோரி வருகின்ற போதும், அரசாங்கம் காலம் தாழ்த்துவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார். எனினும், எல்லை நிர்ணய அறிக்கை நிறைவு பெறவில்லை எனவும் தேர்தலை நடத்துவதற்கு சாதகமான காரணிகள் இல்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கூறினார்.