வணிகர்களுக்கு 50 இலட்சம் ரூபா பிணையில்லாக் கடன்

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வணிகர்களுக்கு 50 இலட்சம் ரூபா பிணையில்லாக் கடன்: மோடி வாக்குறுதி

by Bella Dalima 20-04-2019 | 7:27 PM
பாரதிய ஜனதாக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வணிகர்களுக்கு 50 இலட்சம் ரூபா பிணையில்லாக் கடன் வழங்குவதாக இந்தியப் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். GST பதிவு செய்துள்ள வியாபாரிகளுக்கு 10 இலட்சம் ரூபாவிற்கான விபத்துக் காப்பீடு, கடன் அட்டை , சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இதேவேளை, தேர்தல் நிதிப்பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பெரும்பகுதி நிதி பா.ஜ.க-வுக்கே சென்றுள்ளதாகவும் கடந்த 2017 - 2018 ஆம் ஆண்டில் 221 கோடி ரூபாவில் 210 கோடியை பா.ஜ.க பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் சின்னமான பானைச் சின்னத்தை சிலர் உடைத்ததாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இதன்போது ஏற்பட்ட வன்முறைகளால் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவின் 17 ஆவது மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டத் தேர்தல் 14 மாநிலங்களிலுள்ள 115 தொகுதிகளில் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பீஹார், சட்டீஸ்கர் , குஜராத், கோவா , ஜம்மு - காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்ட்ரா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மேற்கு இந்தியாவின் யூனியன் பிரதேசங்களான தாத்ராநகர் மற்றும் டமாம் பகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.