பெந்தரா பார்டஸ் எனும் அரிய வகை புலிகள் உயிரிழப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 அரிய வகை புலிகள் உயிரிழப்பு

by Staff Writer 19-04-2019 | 3:31 PM
Colombo (News 1st) பெந்தரா பார்டஸ் (Panthera Pardus) எனும் விஞ்ஞானப் பெயர் கொண்டு அழைக்கப்படும், நாட்டின் அரிய வகை புலி இனங்களில் 5 புலிகள் வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மனித செயற்பாடுகளினால் உயிரிழந்துள்ளன. இந்த உயிரிழப்புகளானது ஒப்பீட்டளவில் பாரிய தொகை என வனஜீவராசிகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. புலிகளின் உயிரிழப்புகள் உரிய வகையில் பதிவாகாததால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு பிரிவின் பிரதம செயலாளர் நயனக ரன்வெல்ல தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவிடம் வினவியபோது, சம்பவங்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார். இது குறித்து மக்களுக்கு தௌிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். நாட்டில் ஆயிரத்திற்கும் அதிகமான புலிகள் காணப்படுகின்ற போதிலும், உரிய எண்ணிக்கை இதுவரை கணிப்பிடப்படவில்லை என வனஜீவராசிகள் பாதுகாப்பு பிரிவின் பிரதம செயலாளர் தெரிவித்தார். வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ், புலிகள், பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்