பங்களாதேஷில் மாணவி எரித்துக் கொலை

பங்களாதேஷில் பாலியல் முறைப்பாட்டை மீளப்பெற மறுத்த மாணவி எரித்துக் கொலை

by Bella Dalima 19-04-2019 | 4:58 PM
பங்களாதேஷில் தலைமை ஆசிரியர் மீதான பாலியல் முறைப்பாட்டை மீளப்பெற மறுத்ததால், மாணவி ஒருவர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தலைநகர் டாக்காவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெனி நகரை சேர்ந்த நஸ்ரத் ஜகான் ரபி (வயது 19) என்ற இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த தனியார் பாடசாலையில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் பாடசாலையின் தலைமை ஆசிரியர் தன்னை அவரது அறைக்கு அழைத்து தவறான எண்ணத்தில் தொட்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக நஸ்ரத் ஜகான் ரபி பொலிஸில் முறைப்பாடு செய்தார். இதனையடுத்து, பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமை ஆசிரியரை கைது செய்தனர். இதனால் குறித்த பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் சிலரும் உள்ளூர் அரசியல்வாதிகளும் இணைந்து தலைமை ஆசிரியரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நஸ்ரத் ஜகான் ரபி பொய் முறைப்பாடு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், தலைமை ஆசிரியர் மீது முறைப்பாடு செய்து, 11 நாட்களுக்கு பிறகு தேர்வு எழுதுவதற்காக நஸ்ரத் ஜகான் ரபி பாடசாலைக்கு சென்றுள்ளார். அப்போது, அவரின் தோழி ஒருவர் அவரை பாடசாலையின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பர்தா அணிந்திருந்த 5 பேர் நஸ்ரத் ஜகான் ரபியை சூழ்ந்துகொண்டு தலைமை ஆசிரியர் மீதான முறைப்பாட்டை மீளப் பெறும்படி மிரட்டியுள்ளனர். அதனை ஏற்க மறுத்ததால் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து, பரிதாபமாக இறந்துள்ளார்.