மஹியங்கனை விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று

by Staff Writer 18-04-2019 | 1:12 PM
Colombo (News 1st) ​மஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று (18ஆம் திகதி) மாலை நடைபெறவுள்ளன. மட்டக்களப்பிலிருந்து சுற்றுலா சென்ற இரு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்தனர். கொழும்பிலுள்ள உறவினர்களின் வீட்டுக்கு சென்று விட்டு அம்பாறைக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவித்திருந்தது. விபத்தில் கல்லடி, மாமாங்கம் மற்றும் டச்பார் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்றிரவு மட்டக்களப்பிற்கு கொண்டுசெல்லப்பட்டு அவர்களிள் வீட்டில் வைக்கப்பட்டுள்ளன. இவர்களது இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளதுடன், இறுதி ஆராதனைகளுக்காக சடலங்கள் மட்டக்களப்பு மேயர் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன. இதேவேளை, சடலங்களை நல்லடக்கம் செய்யும் இடம் இது வரை தீர்மானிக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். இதன்போது வேனில் பயணித்த 12 பேரில் 10 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது . சம்பவத்தில் காயமடைந்த 13 மற்றும் 16 வயதான இரண்டு சிறுமிகள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.