பஸ்ஸை நிறுத்தி சரமாரியாக சுட்ட பயங்கரவாதிகள்

பாகிஸ்தானில் பஸ்ஸை நிறுத்தி சரமாரியாக சுட்ட பயங்கரவாதிகள்: 14 பேர் பலி

by Bella Dalima 18-04-2019 | 3:52 PM
பாகிஸ்தானில் பயணிகள் சென்ற பஸ்ஸை நிறுத்தி பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான், பலூசிஸ்தான் மாகாணத்தில் ஒர்மாரா என்ற பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று கராச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்த பஸ் மக்ரான் கடலோர நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது துணை இராணுவப்படை உடையணிந்த சிலர் அதனை நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து பஸ்ஸில் இருந்தவர்களை கீழே இறக்கிவிடுமாறு கூறிய அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதனிடையே, பயணிகள் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பலூசிஸ்தான் மாகாண முதல்வர் ஜாம் கமால் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.