தேசிய இரத்த வங்கிக்கான உபகரணக் கொள்வனவில் முறைகேடு

தேசிய இரத்த வங்கிக்கான உபகரணக் கொள்வனவில் முறைகேடு: ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணை முன்னெடுப்பு

by Staff Writer 18-04-2019 | 7:08 AM
Colombo (News 1st) தேசிய இரத்த வங்கிக்கு உபகரணங்களைக் கொள்வனவு செய்வதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுப்பதாக, அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜேர்மன் மற்றும் நெதர்லாந்திலிருந்து, 283 இரத்த வங்கிகளுக்கான குளிர்சாதனப் பெட்டிகளைக் கொள்வனவு செய்தமை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பில் அங்கு கடமையாற்றிய பதில் பணிப்பாளர், டொக்டர் ருக்ஸான் பெல்லனவுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் தேசிய இரத்த வங்கியின் பிரதிப் பணிப்பாளரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி முதற்கட்ட விசாரணைகளுக்காக, இரத்த வங்கியின் பொறியியலாளர் சுதீர சத்துரங்க ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.