குமண தேசிய சரணாலயத்தில் சிறுத்தை தாக்கி ஒருவர் பலி

by Staff Writer 18-04-2019 | 10:17 PM
Colombo (News 1st) குமண தேசிய சரணாலயத்தில் சிறுத்தை தாக்கியத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். குமண தேசிய சரணாலயத்தின் பாகுரே பகுதியில் இன்று பிற்பகல் வீதி பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரை சிறுத்தை தாக்கியுள்ளது. குமண தேசிய சரணாலயத்தின் நுழைவாயிலில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் பகுதியை சேர்ந்த 45 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலத்தை எடுக்கச்சென்ற வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் ஜீப் சாரதியையும் சிறுத்தை தாக்கியுள்ளது. இதன்போது காயமடைந்த சாரதி அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, குமண சரணாலயத்தின் பாகுரே பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் பிரவேசிக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், சரணாலயத்தின் ஏனைய பகுதிகள் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்துவிடப்பட்டுள்ளதாக சரணாலயத்தின் நிர்வாக அதிகாரி சிறிரகுமார குறிப்பிட்டார். இந்த சம்பவம் தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, இத்தகைய பராமரிப்புப் பணிகளின்போது வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் வழமையாக கடமையில் ஈடுபடுத்தப்படுவார் என கூறினார். எனினும், இந்த சந்தர்ப்பத்தில் தவறு ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்கள உயர் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.