மஹியங்கனையில் இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

by Staff Writer 17-04-2019 | 6:03 AM
Colombo (News 1st) மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (17ஆம் திகதி) அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையிலிருந்து தியதலாவ நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றும் மஹியங்கனையிலிருந்து பயணித்த வேன் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்தில், வேனில் பயணித்த 12 பேர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்கள், மூன்று பெண்களும் அடங்குகின்றனர். உயிரிழந்தவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை தெரியவரவில்லை. விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மேலும் இரண்டு பெண்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.