ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் தொடர்: இலங்கைக்குழு சீனாவுக்கு பயணம்

by Staff Writer 17-04-2019 | 1:27 PM
Colombo (News 1st) ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கைக் குழாம் இன்று (17ஆம் திகதி) அதிகாலை சீனாவுக்கு பயணமாகியுள்ளது. ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் தொடர், சீனாவின் அனுசரனையில் இடம்பெறவுள்ளது. தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாமில் 4 வீரர்களும் 2 வீராங்கனைகளும் உள்ளடங்கியுள்ளனர். 81 கிலோ எடைப்பிரிவில் சிந்தன கீதால் விதானகே, 73 கிலோ எடைப்பிரிவில் இந்திக்க திஸாநாயக்க, 61 கிலோ எடைப்பிரிவில் திலங்க பலகசிங்க மற்றும் 55 கிலோ எடைப்பிரிவில் இசுரு குமார ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இதேவேளை, மகளிர் பிரிவில் 49 கிலோ எடைப்பிரிவில் ஹங்சனி கோமஸ் மற்றும் 55 கிலோ எடைப்பிரிவில் சமரி வர்ணகுலசூரிய ஆகுயோரும் போட்டியிடவுள்ளனர். இந்தத் தொடரில் திறமையை வெளிப்படுத்துகின்ற வீர, வீராங்கனைகள் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் பங்கேற்கின்ற பிரதானமான தெரிவுப்போட்டி இதுவாகும். இதற்காக வீர, வீராங்கனைகள் அனைவரும் சிறந்த மனநிலையோடு இருக்கின்றோம். ஒலிம்பிக் விழாவுக்கான வாய்ப்பைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாக இந்தத் தொடர் அமையும் என எதிர்ப்பார்ப்பதாக,
இலங்கை பளுதூக்கல் அணியின் வீரரான சிந்தன கீதால் விதானகே தெரிவித்துள்ளார்.
இது ஒலிம்பிக் சம்பியன்கள், உலக சம்பியன்கள் அதுமாத்திரமன்றி சர்வதேச அரங்கில் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கின்ற அனைத்து வீரர்களும் பங்கேற்கின்றதொரு தொடராகும். இந்தத் தொடரில் நான் எனது முழுத்திறமையையும் வெளிப்படுத்துவேன். முதலாவது தெரிவுப்போட்டியிலேயே 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விழாவுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ள எதிர்ப்பார்க்கின்றேன். அதுமாத்திரமன்றி தரவரிசையிலும் முன்னேற்றமடைய எதிர்ப்பார்ப்பதாக,
இலங்கை பளுதூக்கல் அணியின் வீரரான இந்திக்க திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.