IPL Match: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி

by Staff Writer 17-04-2019 | 10:27 AM
Colombo (News 1st) ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்றிரவு மொஹாலியில் அரங்கேறிய 32 ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ரோயல்ஸுடன் மோதியது. ஸ்டீவன் சுமித், லியாம் லிவிங்ஸ்டோன், கே.கௌதம் ஆகியோருக்கு பதிலாக நேற்றைய ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பின்னி, சோதி மற்றும் அறிமுக வீரராக ஆஷ்டன் டர்னர் இணைக்கப்பட்டனர். பஞ்சாப் அணியில் சாம் குர்ரன், சர்ப்ராஸ் கான், ஆண்ட்ரூ டை ஆகியோருக்கு பதிலாக டேவிட் மில்லர், முஜீப் ரஹ்மான், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றனர். சண்டிகாரில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது. இன்று நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் களமிறங்கவுள்ளன.