அதிவேக வீதியில் மேலதிக வௌியேறும் வாயில்கள்

அதிவேக வீதியில் மேலதிக வௌியேறும் வாயில்கள்

by Staff Writer 16-04-2019 | 7:29 AM
Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியின் தெரிவுசெய்யப்பட்ட சில இடங்களில் மேலதிக வௌியேறும் வாயில்களை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலையின் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலையின் முகாமைத்துவம் மற்றும் நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக பிரயாணிகளின் நலன் கருதி மேலதிக அலுவலக பணியாளர்களையும் சேவையில் இணைத்துக் கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வௌியேறும் வாயில்களை அண்மித்த பகுதியில் நெரிசல் ஏற்படுகின்றதா என்பது தொடர்பில் அறிந்துகொண்டு அதன் பின்னர் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவது சிறந்தது எனக் கூறிய எஸ். ஓப்பநாயக்க, இது தொடர்பில் அறிவதற்காக 1969 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் தமது சொந்த இடங்களுக்கும் சென்றவர்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்பும்போது கடவத்தை வௌியேறுமிடத்தை அண்மித்த பகுதிகளில் சில சந்தரப்பங்களில் வாகன நெரிசல் நிலவக்கூடும் எனவும் எஸ். ஓப்பநாயக்க கூறியுள்ளார். ஏனைய நுழைவாயில்களை அண்மித்த பகுதிகளில் இந்த நிலை காணப்படாது எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த 10 ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை தினந்தோறும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அதிவேக வீதியில் பயணித்துள்ளதாகவும் அதிவேக நெடுஞ்சாலையின் முகாமைத்துவம் மற்றும் நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.