by Fazlullah Mubarak 15-04-2019 | 7:48 AM
சித்திரைப் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு பொதுமக்களின் வசதி கருதி இன்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிராமங்கள் நோக்கிப் பயணிப்பவர்களின் வசதி கருதியே பஸ் சேவைகள் இன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்து சேவையின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் நிஹால் கிதுல்ஆரச்சி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் முதல் கொழும்பிலிருந்து வௌிப்பகுதிகள் நோக்கி பயணிக்கும் பஸ் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் கிராமங்களுக்கான பஸ் சேவைகளை அதிகரித்துள்ளதாகவும் நிஹால் கிதுல்ஆரச்சி மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, சேவையீடுபடுத்தப்பட்ட தனியார் பஸ்களின் எண்ணிக்கையை இன்று குறைக்கவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவிக்கின்றார்.
தமிழ் சிங்களப் புத்தாண்டைத் தொடர்ந்து இன்று சேவையிலீடுபடும் தனியார் பஸ்களின் எண்ணிக்கையைக் குறைக்கவுள்ளதாகவும் 20ஆம் திகிதி வரை இந்த நிலை தொடரும் எனவும் அஞ்சன பிரியஞ்சித் நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்தார்.
புதுவருடக் காலத்தில் பொதுமக்கள் போக்குவரத்தில் ஈடுபடும் வீதம் குறைவடைந்துள்ளதுடன் பயணிகளின் அசௌகரியங்களை சேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவிக்கின்றது.