இன்னும் 47 நாட்களில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்

இன்னும் 47 நாட்களில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தானில் வெற்றிக்கிண்ணம்

by Staff Writer 13-04-2019 | 5:36 PM
Colombo (News 1st) முழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்னும் 47 நாட்களில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், உலகக்கிண்ணத்தில் சாம்பியனாகும் அணிக்கு பரிசளிக்கப்படும் வெற்றிக்கிண்ணம் பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்காக சகல அணிகளும் தயாராகி வருகின்றன. மே மாதம் 30 ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் உலகக்கிண்ணம் ஜூலை 14 ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளது. இந்நிலையில், கிரிக்கெட் உலகக்கிண்ணம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துக்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் உள்ளிட்ட பெருந்திரளான கிரிக்கெட் ரசிகர்கள் உலகக்கிண்ணத்தை வரவேற்கத் திரண்டுள்ளனர். வரலாற்றில் முதற்தடவையாக கிரிக்கெட் அங்கத்துவம் இல்லாத நாடுகளுக்கும் இம்முறை உலகக்கிண்ணம் கொண்டு செல்லப்படுகின்றது. அதன்படி அமெரிக்கா ,ஜேர்மன் , ருவாண்டா பிரான்ஸ், பெல்ஜியம் , நெதர்லாந்து உள்ளிட்ட 11 நாடுகள் இந்த சிறப்பைப் பெற்றுள்ளன. உலகக் கிண்ணத்தை உலகம் முழுவதும் எடுத்துச்செல்லும் பயணம் துபாயில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமை அலுவலகத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமானது. கிரிக்கெட் உலகக் கிண்ணம் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.