IPL: ராஜஸ்தானை வீழ்த்தியது சென்னை

IPL: ராஜஸ்தானை வீழ்த்தியது சென்னை; 12 புள்ளிகளுடன் முதலிடம்

by Staff Writer 12-04-2019 | 4:15 PM
ராஜஸ்தான் ​ரோயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. IPL தொடரின் 25 ஆவது லீக் போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் களமிறங்கியதுடன், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணித்தலைவர் தோனி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். இதன் பிரகாரம், முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கட்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்றது. ரஹானே 14 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 23 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 15 ஓட்டங்களையும் பெற்றனர். சென்னை அணி சார்பில் தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ஓவர்களில் 24 ஒட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது. இந்நிலையில் தோனியுடன் , அம்பத்தி ராயுடு ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடியதுடன் ராயுடு 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய தோனி அரை சதம் அடித்ததுடன், கடைசி ஓவரில் போல்ட் முறையில் வெளியேறினார். 3 பந்துகளுக்கு 8 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், சாட்னர் அடுத்த 2 பந்துகளில் 4 ஓட்டங்களைப் பெற்றார். இதையடுத்து, உதிரிகள் மூலம் 1 ஓட்டம் கிடைத்ததுடன், இறுதி பந்துக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்டன. நிதானமாக துடுப்பெடுத்தாடிய சான்ட்னர், சிக்ஸ் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றார். இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.