அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கும் நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்தது: கோட்டாபய ராஜபக்ஸ

by Bella Dalima 12-04-2019 | 3:38 PM
Colombo (News 1st) அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று நாடு திரும்பினார். எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் அவர் நாட்டை வந்தடைந்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளரை வரவேற்பதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்குவதற்காக தாம் அமெரிக்கா சென்றதாகவும், அதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததாகவும் நாட்டை வந்தடைந்த கோட்டாபய ராஜபக்ஸ கூறினார். இந்த விடயம் தொடர்பில் அங்குள்ள சட்டத்தரணிகள் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
சுமார் 10, 12 வருடங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் கொலை, அதேபோல மற்றுமொருவரின் கைது ஆகியன தொடர்பில் சிவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, அங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள சிவில் வழக்கிற்கான அறிவித்தலை அவர்கள் எனக்கு அனுப்பி வைக்க வேண்டும். எனினும், உரிய வகையில் அதனை இதுவரை என்னிடம் கையளிக்கவில்லை. அந்த வழக்கை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை எனது சட்டத்தரணிகளூடாக நான் மேற்கொண்டு வருகின்றேன். இதற்கு பல தரப்பினரிடமிருந்தும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளிலுள்ள இலங்கை புலம்பெயர் தமிழர்களுக்கு சொந்தமான அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று அதேபோல இலங்கையிலுள்ள சில தரப்பினர்களும் அச்சுறுத்தலாகஅமைந்துள்ளனர். கலிபோர்னியாவிலுள்ள கன்சியூலர் ஜெனரல் அலுவலகத்தினூடாகவும் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது என்பதை கூறவும் கவலையடைகின்றேன். மிக கீழ்த்தரமாக அரசியலை கொண்டு செல்வது முறையற்ற செயலாகும்.
என கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டார்.