மே மாத இறுதி வரை குறிப்பிடத்தக்க அளவு மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது

by Staff Writer 11-04-2019 | 8:33 PM
Colombo (News 1st) அடுத்த சில நாட்களுக்கு இடைக்கிடையே ஒரளவு மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும், மே மாதம் இறுதி வரை குறிப்பிடத்தக்களவு மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் நிலவும் வறட்சியினால் 19 மாவட்டங்களை சேர்ந்த 5,48,905 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான மக்கள் நீர்த்தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள நிலையில், தற்போது வாழ்வாதாரத்தையும் இழக்கும் நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது நிலவும் வெப்பமான வானிலையினால் யாழ். மாவட்ட கேரட் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய், புத்தூர், நவக்கிரி, அச்சுவேலி பிரதேசங்களில் சுமார் 200 பேரளவில் கேரட் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வானிலை மாற்றத்தை அடுத்து, விளைச்சல் குறைவாகவுள்ளதுடன், கேரட்டின் விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வழமையாக மூன்று மாதங்களில் அறுவடை இடம்பெறும். எனினும், தற்போது வெப்பமான வானிலையினால் வளர்ச்சி குன்றியுள்ளதுடன், நோய்த்தாக்கமும் ஏற்படுவதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.

ஏனைய செய்திகள்